Thursday 11 April 2013
உன் வாசம்
விண் எனும் இறையில்
விரவிக்கிடக்கும் மின்துகளாய்,
நீரினுள் ஊறிக்கிடக்கும் மீனாய்,
என் கவிதைக்குளத்தினுள்
காலம் காணாமல் கரைந்திடும்
ரகசியமாய் உன்னின் நீச்சல்.
ஒட்டிக்கிடக்கும் உன்வாசமே,
உருகியோடிடும் உன்சுவாசமே,
உள்ளதைச் சொல்லும் உன்னுள்ளமே.
கனவினில் நினைவைத் தெளித்தவுடன்
பளிச்சென விக்கல்வரும் உனக்கு,
பொருமல் வராமல் பார்த்துக்கொள்.
பொறுத்துப் பொறுத்து இருந்திட்டாய்,
பொறுமையின் எல்லையினைக்
கடந்திட்டாய், புண்ணியமாய் போகும்,
புதுவிதமாய் வாழ்வு மாறிடும்,
மூளையினை தீட்டுகிறேன்,
மறுமுறை குழல்விளக்காய் மாறாதிருக்க.
மௌன மொழி உரைக்கின்றாய்,
கண்களாலே கவிதை செய்கின்றாய்,
நம் தனிமைகளைத் தவிர்க்கின்றாய்,
தொண்டைவரை கொண்டவரை,
வந்தவரை மனம் நொந்தவரை,
சென்றவரைப் பின் வென்றவரை,
மறைவினில் மடியினில் கிடத்தி,
மலர்மஞ்சமாக காதல்மணம் பரப்பி,
ரத்தத்தை அத்தம்வரை கிள்ளுகின்றாய்.
உயிரைத் தொலைத்துவிட்டேன்.
உன்னிடம் உண்டென்றால் வந்துசெல்.
இல்லை, கண்டெடுத்தால் இன்றுகொள்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment