Thursday 4 April 2013

இதுதான் ஜென்மசங்கல்பமோ


அதிகாலை மணி 4க்கு பட்டென விழித்துவிட்டான். அது அவள்பற்றின அருமையான கனவுடனான விழிப்பு, அதனால் அவனினுள் இன்ப அதிர்வுகள் முழுமையாய் ஆக்கிரமித்திருந்தன. அவனால் அவள் அவனினுள் இருப்பதினை ஒவ்வொரு நொடியும் உணரமுடிந்திருந்தது. ரத்தத்தின் அணுக்களில் அவளின் துடிப்புகள். தசைகளின் உள்ளே அவளின் ஸ்பரிசம். முறுக்கி நின்ற நரம்புகளின் ஊடே வழிந்த காந்தத்தில் அவளின் உரசல்கள். எல்லாமுமாக சேர்ந்து அவனை மொத்தமாக ஆனந்தமாய்க் கூத்தாடிக் கிடந்தன. சரி, குளிக்கலாம் என்று எண்ணி அந்த வீட்டின் முன்னிருந்த நீச்சல்குளத்தில் குளிக்க இறங்கினான்.
இன்னும் அவள் அவனினுள்தான் இருந்தாள். அதை அவனால் மிகத் தெளிவாக உணரமுடிந்தது. கண்களை மூடினான். ஒரு பெருமூச்சினை உள்ளிழுத்து நீரினுள் மூழ்கி அப்படியே மிதந்தான். உடலின் அத்தனைத் தசைகளின் இருக்கத்தினையும் தளர்த்தினான். இப்பொழுது அவனால் மிகத்தெளிவாக உணரமுடிந்தது, அந்தக் குளத்தின் நீர்முழுவதுமாக அவள் கரைத்து நிரப்பப்பட்டு பரவிக்கிடந்தாள். அதில் அவன் மிதப்பதினைப்பொல் இருந்தது. அதாவது அவளினுள் ஒரு அணுவாக அவன் சுற்றிக்கொண்டு மிதக்கின்றான். அந்த ஒவ்வொரு நொடியும் அவனுக்கு கலவியின் உச்சஇன்ப அதிர்வுகள் தொடர்ந்து இருந்துகொண்டே இருந்தது.
இப்பொழுது அணுவினைப்போல் இருந்த தனக்குள்ளேயே உட்ச்சென்றான். இன்ப அதிர்வுகள் பலமடங்கு கூடினின்றது. மேலும் அவள் இப்பொழுது ஆகாயம் முழுமைக்கும் பரவிவிட்டிருந்தாள், அளவிடமுடியாத அளவுக்கு. அவன் இன்னமும் அந்தச் சிறிய அணுவாகவே, அதேயளவு பேரின்பத்தினை அனுபவித்துக்கொண்டே மிதக்கிறான், தேவையான பொழுது மூச்சினைமட்டும் வெளிவந்து இழுத்துக்கொண்டு. பலமணி நேரம் இது தொடர்ந்து இருந்துகொண்டே இருந்தது. நீச்சல்குளத்திலிருந்து வெளிவர மனமில்லாமல் இன்பத்தினை அனுபவித்துக்கொண்டே இருக்கின்றான்.
வீட்டினுள்ளேயிருந்து தோழியின் சத்தம் கேட்டது. “ எவ்வளவு நேரம்தான் தண்ணிக்குள்ளேயே கிடப்பீர்கள்” என்று. அப்படியே வெளியேறி நிலைமாறாமல் அமைதியாக அறைக்குள் சென்றான்.
இதுதான் தியானமோ என்னவோ? இன்னும் அவள் அவனினுள்ளிருந்து வெளிவரவில்லை. அவனால் அவளை வெளியேற்ற அனுமதிக்கவும் முடியவில்லை. அவனுக்குள் அவளா அல்லது அவளுக்குள் அவனா, உணரவும்முடியவில்லை. ஜென்மசங்கல்பமாக இருக்கலாமோ. அனுபவித்த “அதுதான்” கடவுளோ. எப்படியாயினும் புரிந்துகொண்டுவிட்டான், இப்பிறவிப்பயனை.

No comments:

Post a Comment