Sunday 17 February 2013
உண்மையான நட்பு இது
அவன் பெயர் குரு. பெயருக்கேற்றாற்போல் அவன் படிப்பிலும் குருதான். எங்களுடன் ஆறாம் வகுப்பிலிருந்து 11 வரை படித்தான். பள்ளியில் எனக்கு நினைவில் இருக்கும்முதல் அவன்தான் முதல் மாணவன். நன்றாகப் படிக்காத என்போன்றவர்களை அவன் ஒருபொழுதும், அவனருகில்கூட நிற்க அனுமதித்ததில்லை. நான் சிலசமயம் நினைப்பேன், படிப்பைத் தவிர அவன் எதுவுமே செய்வதில்லையோவென்று. அந்த அளவுக்கு அவன் பள்ளியில் நடந்துகொள்வான்.
puc சேவியர் கல்லூரியில் படித்தோம். அவன் காமெர்ஸ் படித்தான், நான் கணக்கு. தமிழ் மற்றும் ஆங்கில வகுப்புகளில் எங்கள் அறைக்கு எங்களோடு வருவான். என் வாழ்க்கையில் அந்தக் காலங்களில் என்னோடு ஒரிருமுறைதான் பேசியே இருப்பான். அந்தக்காலங்களில் பேங்க்வேலை கிடைப்பதென்பது எல்லா தகப்பனும் விரும்பும் வேலைதான். அதனாலேயே அவனும் காமெர்ஸ் எடுத்துப் படித்தான்போலும்.
கல்லூரிக் காலங்களிலேயே நாங்கள், நண்பர்கள் கூட்டம் ஒரு க்ரூப்பாகவே சுற்றிவருவொம். எல்லா கெட்ட பழக்கங்களும் படித்து வைத்திருந்தோம். சொல்லப்போனால் அவற்றில் கரை கண்டிருந்தோம். கல்லூரி வாழ்க்கைக்குப்பின் அவன் பீகாம் முதல் மாணவனாகவே தேறியிருந்தான். நல்ல மார்க் பெற்றிருந்ததினால் அவனுக்கு ஸ்டேட்பேங்கில் உடனே வேலையும் கிடைத்துவிட்டது. நான் வேலையெதும் கிடைக்காமல் என் தகப்பனார் கவனித்துவந்த கடைக்கே வேலைக்கு வந்துவிட்டேன்.
இப்படியே 3 வருடங்கள் ஒடிவிட்டிருந்தன. அவனை பலமுறை பேங்க் செல்லும் வேலையில் பார்த்திருக்கிறேன். கண்டுகொள்ளமாட்டான். பின்னர் பேங்க் பரிட்சைகளும் எழுதி முடித்து அதே பேங்கில் மேனேஜராகவும் ஆகிவிட்டான். அதன் பின் நானும் வெளியூரில் தொழில் துவங்கிவிட்டதால் அவனை சந்திக்கவே இல்லை. என் தற்போதைய வாழ்க்கை மிகவும் மாறிவிட்டது. இந்தக் கதைக்கு அதுபற்றியொன்றும் தேவையில்லை.
இருபது வருடங்களுக்குப்பின் மீண்டும் அவனை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. அவனுக்கு அப்பொழுது வயது சுமார் 42 இருக்கும், எனக்கும் அதுதான். ஆனால் அவனைப் பார்ப்பதற்கு 60 வயதுபோல இருந்தான். என்னால் அவனை அடையாளம் கண்டுகொள்ளக் கூட முடியவில்லை. அந்தளவு முகம் சுருங்கி வதங்கி இருந்தான். அவனின் சக ஊளியர்களிடம் அவன் பற்றி வினவினேன். அவர்களின் பதில் என்னை உறைய வைத்துவிட்டது.
மேனேஜராக பொறுப்பேற்றதும் அந்த பேங்கிலேயே வேலை பார்த்துவந்த ஒரு பெண்ணைக் காதலித்திருந்திருக்கிறான். அவள் மிகவும் அழகாக இருப்பாளாம். ஆனால் அவள் இவனை விரும்பவில்லை. பிறகு சிலபல குழப்பங்களுக்குப் பின்னர் அவள் வேறு ப்ரேஞ்சுக்கு மாற்றல் மாற்றக்கேட்டு சென்றுவிட்டாள். அதன்பின் அவனால் சரியாக வேலை செய்ய முடியாமல் காதல்பித்துப் பிடித்த பைத்தியம் போல் ஆகிவிட்டிருக்கிறான். அவனின் மேனேஜர் பதவியும் இதனால் போய்விட்டிருக்கிறது. காதல் தோல்வி, திருமணம் செய்துகொள்ள விருப்பமின்றி குடியினுள் அவனை இழுத்துக்கொண்டது. தற்பொழுது விழித்திருக்கும் பொழுது அவனால் மதுவின்றி இருக்கமுடிவதில்லை. கதையினை கேள்விப்பட்டதும் மனதை என்னவெல்லாமோ செய்தது. நான் பார்த்த தன்னிகரில்லா குரு, கோவனாண்டியைப்போல நிற்கின்றான். அவனைப் போய்ப் பார்த்தேன். என்னிடம் சாரி கேட்டான். என்னவென்று கேட்டதும், பள்ளியில் படிக்கும் வேளையில் நடந்தவைகளுக்காக என்றான். என்னவென்று சொல்வது.
அவனை அவன் வேலையை விட்டுவிட அறிவுருத்தி, என்னொடு அவனை அழைத்து சென்றுவிட்டேன். அவனுக்கு தொழிலில் ஒரு ஷேர் கொடுத்து என்னுடனேயே வைத்துக்கொண்டேன். இப்பொழுது அவன் குடிப்பதில்லை. ஆனாலும் திருமணம் செய்துகொள்ளமுடியாது என்றே சொல்லிவிட்டான். முகத்தில் ஆனந்தம் குடிகொண்டிருப்பதை உணரமுடிகிறது. சந்தொஷமாக இறையுடன் ஐக்கியமானவனாக தோற்றமளிக்கிறான் நல்ல நண்பனாக.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment